இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி வாழ்வுரிமைக் கட்சி ரயில் மறியல்... 60,000 பேர் கைது- வேல்முருகன்
சென்னை: இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை கோரி தமிழகம் முழுவதும் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
தர்மபுரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கைது செய்யபப்ட்டார்.
தமிழகம் முழுவதும் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
சர்வதேச விசாரணை கோரி
ஈழத்தமிழர்களுக்கு நீதியை வழங்க அனைத்துலக நாடுகளை வலியுறுத்தவும், குறிப்பாக இந்தியாவின் நரேந்திர மோடி அரசு, சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தைச் செய்யாமல் பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை மனித உரிமைக் கவுன்சிலில் முன் வைக்க வலியுறுத்தி கரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும்
சென்னை முதல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இப்போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் சத்திய மூர்த்தி தலைமையில் கரூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசை வலியுறுத்தி
மத்திய அரசை வலியுறுத்தியும், மனித உரிமை கமிஷனை வலியுறுத்தியும் மாபெரும் ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல சென்னை உள்பட பல நகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்.
தர்மபுரியில் வேல்முருகன் கைது
தர்மபுரியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரத்தில்
சிதம்பரத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரயிலை மறிக்க 300க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் திரண்டனர். அவர்களை ரயில் நிலையத்துக்கு உள்ளே விடாமல் போலிசார் தடுத்து நிறுத்தியதால் போலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
60,000 பேர் கைது - வேல்முருகன்
இந்த நிலையில் இந்தப் போராட்டம் குறித்து பண்ருட்டி தி. வேல்முருகன் கூறுகையில், இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்துக என்பது உள்ளிட்ட தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற ரயில் மறியலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தர்மபுரியில் என் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம். காவல்துறையினர் போதுமான ஏற்பாடுகளை செய்ய முடியாமல் 60 ஆயிரம் பேரை மட்டும் கைது செய்து வாகனங்களில் ஏற்றியிருக்கிறது. எஞ்சிய 50 ஆயிரம் பேரை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த மாபெரும் அறப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.