ஐ.சி.எப்.-ல் வேலை கோரி தீக்குளிப்பு... பொதுமேலாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: சென்னை ஐ.சி.எப்.-ல் வேலை கோரி பயிற்சி மாணவர் ஹேமந்த்குமார் தீக்குளித்து மரணமடைந்ததற்கு காரணமான சென்னை ரயில்வே பொதுமேலாளர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்-ல் பயிற்சி படிப்பு முடித்த அப்ரண்டீஸ் மாணவர்களுக்கு 17 ஆண்டுகாலமாக வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்காமல் வடமாநிலத்தவருக்கே தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும் சென்னையில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உடனே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் பல அறப்போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம்.
இந்த பயிற்சி மாணவர்கள் கடந்த 71 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். ஆனாலும் ரயில்வே பொதுமேலாளர் இந்த பயிற்சி மாணவர்களின் எதிர்காலம் குறித்து கிஞ்சித்தும் அக்கற்றை காட்டவே இல்லை. அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
தங்களது வேலைவாய்ப்பு குறித்து பொதுமேலாளரிடம் நேரில் சென்று ஹேமந்த்குமார் கேட்டபோது, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டியதுதானே நாய்களே... என ஆணவத்துடன் திட்டியுள்ளார்.
இத்தகைய ரயில்வே பொதுமேலாளரின் அவமானப்படுத்துகிற, சுயமரியாதை சீண்டுகிற செயலால்தான் தமக்கு இனியும் நீதி கிடைக்கப்போவதில்லை; தம்முடைய மரணமானது 17 ஆண்டுகாலமாக போராடுகிற மாணவர்களின் போராட்டத்துக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தட்டும் என்ற உன்னத லட்சியத்துடன் தம்மை தீ நாக்குகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற இளைஞர்...
அவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் ஊழியர்கள், ரயில்வே போலீசார் முன்னிலையில்தான் ஹேமந்த்குமார் தீக்குளித்திருக்கிறார்... தீக்காயங்களுடன் 'வேலை வழங்குகள்" என முழக்கமிட்ட அந்த இளைஞரைக் காப்பாற்றுவதற்கு எவருமே முன்வராத பெருங்கொடுமையும் நிகழ்ந்திருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹேமந்த்குமார் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த போது ரயில்வே போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்த புகைப்படங்களுடம் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஐ.சி.எப் நிர்வாகத்தின் ஆணவத்தால், பொதுமேலாளரின் அராஜகத்தால் இப்போது ஹேமந்த்குமார் நம்முடன் இல்லை... ஹேமந்த்குமாரை மரணத்தை நோக்கி துரத்தியது ரயில்வே பொதுமேலாளரும் மற்றும் உயர் அதிகாரிகளுமே.. ஆகையால் அவர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை ஐ.சி.எப்.-ல் பயிற்சி பணி முடித்தவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் பணிவாய்ப்பு வழங்க முன்வராத நிலையில் வடமாநிலத்தவருக்கே வேலைவாய்ப்பு வழங்கும் அராஜகப் போக்கை கைவிட்டு 17 ஆண்டுகாலம் போராடுகிற 7,000 பயிற்சி மாணவர்களுக்கும் உடனே வேலைவாய்ப்பை ஐ.சி.எப். நிர்வாகம் வழங்க வேண்டும்;
வேலை கோரி தம்முயிரை மாய்த்துக் கொண்ட ஹேமந்த்குமாரின் இளம் மனைவிக்கு உரிய பணிவாய்ப்பு வழங்குவதுடன் ரூ10 லட்சம் நிதி உதவியையும் ஐ.சி.எப். நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பிரச்சனையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு இனியும் ஹேமந்த்குமார்கள் தீக்குளித்து தம்முயிரை மாய்க்கும் விபரீதங்கள் தொடராமல் இருக்கவும் சென்னையில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சி மாணவர்களுக்கும் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கிடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.