பாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார்
பாழடைந்த கட்டடத்தில் வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர் என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை: பாழடைந்த கட்டடத்தில் வைத்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர் என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்திக்க சென்றார். விமானநிலையத்தில் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் விக்கிரவாண்டியில் டோல்கேட் தாக்கப்பட்ட வழக்கில், வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப்பிரிவு
அப்போது தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து, சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் கைது
இந்நிலையில் என்எல்சி போராட்ட வழக்கில் வேல்முருகனை நெய்வேலி போலீசார் தேச துரோக வழக்கில் இன்று கைது செய்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
தேசத்துரோக வழக்குப்பதிவு
அப்போது அவர் பேசியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் கோரி அமைதியான முறையில் போராடிய என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை
தூத்துக்குடியில் கைது செய்து பாழடைந்த கட்டடத்தில் உணவு, நீர் தராமல் என்னை கொடுமைப்படுத்தினர். உணவு அருந்தாததாலும், சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலும் என் உடல் சோர்ந்து விட்டது.
வடமாநில அதிகாரி
இயற்கை உபாதைகளை கழிக்க கூட வாகனத்தை எங்கும் நிறுத்தவில்லை. மதுரையை சேர்ந்த வட மாநில காவல்துறை அதிகாரி இதுபோன்ற கொடுமைப்படுத்தினார்.
குரு இறுதிச்சடங்கில்
ஆனால் இங்குள்ள போலீசாரால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காடுவெட்டி குருவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கூடாது என்பதற்காகவே கைது செய்தனர்.
பேச முடியவில்லை
இப்போதும் நான் தண்ணீர் கூட குடிக்கவில்லை. இதனால் நாக்கு வறண்டு போயுள்ளது. என்னால் பேசமுடியவில்லை. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.