காவிரி வாரியத்திற்காக ஏப்ரல் 29ல் மெரினாவில் போராட்டம்... வேல்முருகன் எச்சரிக்கை!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 29ம் தேதி மெரினாவில் உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஏப்ரல் 29ல் மெரினாவில் உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். போலீசார் அனுமதி மறுத்தாலும் அமைதி வழியில் போராட்டம் நடக்கும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் உரிமையாம் காவிரி நீரைப் பெற காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் நீண்ட காலங்களாக போராடி வருகின்றனர். பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 6 வார காலக்கெடுவை மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் ஸ்கீம் என்ற வார்த்தையை சுட்டிக்காட்டி அதற்கு அர்த்தம் புரியவில்லை என்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததோடு, விளக்கம் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து மே மாதம் வரை காலக்கெடுவை நீட்டிப்பு செய்துவிட்டது.
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாக பார்க்கப்படும் மத்திய அரசின் அணுகுமுறைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள் என்று பலரும் காவிரி உரிமைக்காக வீதிக்கு வந்த போராடினர்.
காவிரி உரிமைக்கான போராட்டங்கள் நடக்கும் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கக் கூடாது என்று நடத்தப்பட்ட மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் காரணமாக ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுவிட்டன. ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பபு போராட்டங்களை முதன்முதலில் அறிவித்தவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 29ல் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். உழைப்பாளர் சிலை முன்பு இந்த போராட்டத்தை நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கோரப்படும்.
ஒருவேளை போலீசார் அனுமதி மறுக்கும் பட்சத்தில் அமைதியான வழியில் இந்த போராட்டம் நடக்கும் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ, மே 17 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் வேல்முருகன் கூறியுள்ளார்.