மதங்களைக் கடந்த மனிதர்களாய் ஒடுக்கு முறையை எதிர்கொள்வோம்... வேல்முருகன் கிறிஸ்துமஸ் வாழ்த்து
சென்னை: உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் இந்நாளில், மனித நேயத்தையும் சுதந்திரமான வாழ்வையும் ஏற்படுத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வேல்முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:
உலகம் முழுவதும் வாழும் கிறித்துவ சமுதாய உறவுகள் அனைவருக்கும் எனது கிறித்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்கான அர்ப்பணிப்புமிக்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்பதை கிறித்துமஸ் திருநாள் உறுதிமொழியாக ஏற்போம்.
யேசு பிரான் போதித்த அன்பு, கனிவை கொள்கையாகக் கொண்டிருக்கும் கிறித்துவ உறவுகளில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்தத் திருநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட இயலாத நிலையில் மீன்பிடிக்கப் போன நிலையில் பல்வேறு நாட்டு சிறைகளில் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.. தங்களது சந்ததி மட்டுமல்ல.. தமிழ்நாடே அழிந்துபோகும் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள தமிழர்களும் தங்களது இருள் சூழ்ந்த வாழ்க்கை அகன்று சுதந்திரத்துக்காக ஏங்கி நிற்கின்றனர். இந்திய மண்ணில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிற இந்துத்வா சக்திகள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய அபாயங்களை அச்சுறுத்தல்களை ஜாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களாய், மனிதர்களாய் நின்று எதிர்கொள்வோம்! மனித நேயத்தையும் சுதந்திரமான வாழ்வையும் ஏற்படுத்துவோம் என இந்தத் திருநாளில் கிறித்துவ பெருமக்களுடன் இணைந்து நாமும் உறுதியேற்போம்.
அனைத்து கிறித்துவ உறவுகளுக்கும் என் மனமார்ந்த கிறித்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழத்து செய்தியில் கூறியுள்ளார்.