நெல்லையில் திட்டமிட்டு தடியடி நடத்திய போலீசாரை கைது செய்ய டி.ஜி.பி.யிடம் வேல்முருகன் வலியுறுத்தல்!!
சென்னை: நெல்லையில் பெப்சி, கோககோலா ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தடியடி நடத்திய போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.யிட அக்கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நாசகார பெப்சி, கோககோலா ஆலைகளை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நேற்று அக்டோபர் 27-ந் தேதி அறப்போராட்டத்தை நடத்தினர்.
ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் 100 பேரை மட்டும் போலீசார் கைது செய்தனர். இதனால் மற்றவர்களும் தங்களையும் கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
அப்போது திடீரென கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் சிவமுருகன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் கொலைவெறியோடு தாக்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி உள்ளிட்ட பலரது மண்டை உடைந்தது. இது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் டி.ஜி.பி. அசோக்குமாரை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் சந்தித்தார். அப்போது, பெப்சி, கோக் ஆலைகளிடம் பணம்பெற்றுக் கொண்டு தமது கட்சியினர் மீது திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்திய கங்கைகொண்டான் இன்ஸ்பெக்டர் சிவமுருகன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்; அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக தன்னுடைய இல்லத்தில் இச்சம்பவம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் வேல்முருகன் ஆலோசனை நடத்தினார்.