முன்னறிவிப்பில்லாத கட்டண உயர்வு அறிவிப்பு திருட்டுத்தனத்தை காட்டுகிறது... வேல்முருகன் காட்டம்
முன்னறிவிப்பில்லாத பேருந்து கட்டண உயர்வு அரசின் திருட்டுத்தனமான செயல்பட்டை காட்டுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சியாளர்களே கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் வரலாறு காணாத இன்றைய பேருந்துக் கட்டண உயர்வு என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர். அவரது அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 8 போக்குவரத்துக் கழகங்கள் இயங்குகின்றன. இவை மொத்தம் 20,023 பேருந்துகளை இயக்குகின்றன. இவற்றில் கால்வாசி பேருந்துகளே ஓட, ஓட்டத் தகுதி உள்ளவை.
சுமார் 1,45,000 தொழிலாளர்கள் அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு இவர்களையொத்த பிற அரசுத் துறை ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. மாதாமாதம் இவர்களின் ஊதியத்திலிருந்து பல்வேறு இனங்களுக்காகப் பிடிக்கப்படும் தொகை, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன், பணிக்கொடை என ரூ.7,000 கோடி பல ஆண்டுகளாக இன்னும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. பல முறை பேச்சு மற்றும் போராட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு வந்தபாடில்லை.
இப்படியொரு நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் என்றால், அது சீரழிந்து கிடக்கிறது என்றுதான் பொருள். இதற்குக் காரணம் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அதன் டெப்போக்களில் நடக்கும் கொள்ளையாகத்தான் இருக்க முடியும். ஒட்டச் சுரண்டிவிட்டு மோடியின் விருப்பப்படி போக்குவரத்துத் துறையை தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்றுதான் துணிந்து சூறையாடுகிறார்கள். இப்போது, எப்போதும் அதிமுக அரசு கவிழலாம் என்பதே நிலைமை. அதனாலேயே ஆட்சியை விட்டுப் போகுமுன் அடிக்கிற கொள்ளையை மேலும் தீவிரப்படுத்துவதென முடிவு செய்து பேருந்துக் கட்டணம் 75 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5; 20ஆவது நிலை வரை ரூ.19; 28ஆவது நிலை வரை ரூ.23.
வெளியூர் பேருந்துகளில் 10 கிலோமீட்டர் வரை ரூ.6.
விரைவுப் பேருந்து 30 கி.மீ வரை கட்டணம் ரூ.24.
சொகுசு இடைநில்லா பேருந்து 30 கி.மீ வரை ரூ.27.
அதிநவீன சொகுசுப் பேருந்து 30 கி.மீ வரை ரூ.33.
குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ வரை ரூ.42.
வோல்வோ பேருந்து 30 கி.மீ வரை ரூ.51.
இந்தக் கட்டண உயர்வு 20.01.2018 முதல் அமலுக்கு வருகிறது. வகை வகையான பேருந்துகள், வகை வகையான கட்டணங்கள். ஆனால் மழைக்கு ஒழுகாத பேருந்து என்று ஒன்றுகூடக் கிடையாது.
இந்த நிலையில்தான் வரலாறு காணாத அளவுக்குப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்குத் தோதாக இந்தக் கட்டணத்தை மற்றியமைத்துக்கொள்ளவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது அரசு. இந்தக் கட்டண உயர்வு எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென அறிவிக்கப்பட்டிருப்பது, ஆட்சியாளர்களின் திருட்டுத்தனத்தையே பகிரங்கப்படுத்தியிருக்கிறது.
அரசமைப்புச் சட்டப்படி, பெரும்பான்மை இல்லாது தகுதி இழந்த அதிமுக அரசு, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்ல; எந்த ஒரு கொள்கை முடிவையுமே எடுக்க முடியாது. அப்படியிருக்க ஆளுநர் இதை அனுமதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி! ஏழை எளிய நடுத்தர மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் இந்த அநியாய அக்கிரமக் கொள்ளையை உடனடியாகத் திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறோம்.