திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி.. கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திருமாவளவனின் தலையை கொண்டுவருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும் என இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத் அறிவித்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தலையை துண்டிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசை அறிவித்தார் இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத்.
திருப்பூரைச் சேர்ந்த இவர் மீது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலர் தமிழ்வேந்தன் அளித்த புகாரின் பேரில், நேற்று காவல்துறையினர் கோபிநாத்தைக் கைது செய்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கோபிநாத், அவரைச் சார்ந்தோருடன், "இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும்" என்று திருமாவளவன் பேசியதாக, அவரது உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தின்போதுதான், திருமாவளவன் தலையைத் துண்டிக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்ய
அப்போதே கோபிநாத்தைக் கைது செய்யாத காவல்துறை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புகார் செய்த பிறகுதான் அவரைக் கைது செய்திருக்கிறது. திருமாவளவனை கொலை செய்யத் திட்டமிட்ட கோபிநாத் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் அந்த 4 பிரிவுகளுமே சாதாரண பிரிவுகள்தான்; அவை கொலை தொடர்பான பிரிவுகள் இல்லை.
இதனால் கோபிநாத், இந்த வழக்கிலிருந்து எளிதில் விடுபட்டு, தான் திட்டமிட்டபடி கொலையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது.
எனவே கோபிநாத் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்ய வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
ஆதாரம் உள்ளது
இவ்வாறு வலியுறுத்துவதற்கு போதிய காரணம் - ஆதாரம் உள்ளது. "அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதால்தான் அது இடிக்கப்பட்டதாக சங் பரிவார் அமைப்புகள் கூறுகின்றன. வாதத்திற்காக அதை ஒப்புக் கொண்டாலும், புத்த விகார்களையும் சமணக் கோயில்களையும் இடித்து இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன என்ற வரலாற்று உண்மையின்படி இந்துக் கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என்று சொல்லமுடியுமா?" என்றுதான் திருமாவளவன் பேசியிருந்தார்.
ஆனால் அதைப் புரட்டித் திரித்து, "இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று பேசிய திருமாவளவனின் தலையை வெட்டிக் கொண்டுவரும் நபருக்கு எங்களது இந்து முன்னேற்றக் கழகம் சார்பாக ஒரு கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்று அறிவித்தார் கோபிநாத்.
எச் ராஜா கண்டிக்கவில்லை
கோபிநாத் பட்டவர்த்தனமாக இப்படி அறிவிக்கக் காரணமே, அவருக்குப் பின்னால் தமிழ்நாடு பாஜக இருப்பதுதான்.
பாஜகவின் தேசியச் செயலரான எச். ராஜா, கோபிநாத்தின் இந்த அறிவிப்பைக் கண்டிக்கவில்லை; மாறாக, "கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசிய திருமாவளவன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
பாஜகவின் தமிழ்நாடு தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், கோபிநாத்தை விட்டுவிட்டு, திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் சொன்னார்.
ஆக, கோபிநாத்துக்குப் பின்னால் பாஜக இருப்பது தெளிவாகிறது.
பாஜகவின் அங்கங்களாகச் செயல்படுவது கோபிநாத் சார்ந்த இந்து முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல; சங் பரிவார் அமைப்புகள் பல அவ்வாறு செயல்படுகின்றன.
சர்ச்சுக்குள் தாக்குதல்
அவற்றில் ஒன்றான ஆர்எஸ்ஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர், கோபிநாத் கைதை அடுத்து நேற்று கோவையில் ஒரு சர்ச்சுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்; சர்ச்சில் ஜன்னல் கண்ணாடிகள், மேஜை நாற்காற்காலிகளை உடைத்து சர்ச்சின் போதகரையும் தாக்கி ரத்தம் சொட்ட வைத்துள்ளனர்.
மிக அண்மையில் சென்னையிலும் விழுப்புரத்திலும்கூட இதுபோல் சம்பவத்தை அறங்கேற்றினர்.
இப்படி மதவாத, வகுப்புவாத வெறியாட்டங்களை திட்டமிட்டு நடத்தவே, பெரும்பான்மை பலமற்ற, பொருளியல் குற்றச் சார்புடைய பழனிச்சாமி அமைச்சரவையை அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக பதவியில் நீடிக்கவிட்டு தன் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறது மோடியின் நடுவண் பாஜக அரசு.
குண்டர் சட்டத்தில் கைது
அப்படிப்பட்ட பழனிச்சாமி அரசு, படுகொலை தொடர்பான குற்றச்சாட்டில், கோபிநாத் மீது சாதாரண பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
எனவேதான் சாதாரண பிரிவுகளின் கீழ் கோபிநாத்தைக் கைது செய்திருப்பது, வழக்கிலிருந்து எளிதில் அவர் விடுபட்டு, திட்டமிட்டபடி கொலையை அவர் நிறைவேற்றிக் கொள்ள வழிவகுப்பதாகும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
ஆகவே கோபிநாத் மீது கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அவரைக் கைது செய்யுமாறு வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.