கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆரை தூண்டியது காங்கிரஸ்... வேல்முருகன் போடும் புது குண்டு
சென்னை: மாநில உரிமைகளை பற்றி பேசும் கட்சிகள் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் திமுகவில் எம்.ஜி.ஆரை வைத்து காங்கிரஸ் கலகம் செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மாநில உரிமைகளை யார் விட்டுக்கொடுத்தாலும் தேர்தலில் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு தோல்வி தான் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஜமால்.. சமாதி மீது கைவைத்து உருகிய அமேசான் அதிபர் பெஸோஸ்.. சவுதி சல்மானுக்கு ரகசிய வார்னிங்!
பணியவைத்தது
ஒரு கட்சியின் வரவு-செலவு கணக்கைக் கையாள்பவர் பொருளாளர்; அந்த விவரத்தை அவர் கட்சிக்குத் தெரிவிக்கும் கடமைப்பட்டவர். ஆனால் அதற்கு மாறாக அவரோ கட்சித் தலைமையைப் பார்த்தே கணக்கு கேட்கிறார். இதனால் அவர் கட்சியிலிருந்தே வெளியேற்றப்படுகிறார்; உடனே அவர் அண்ணாவின் பெயரிலேயே புதிய கட்சி ஒன்றைத் தொடங்கிவிடுகிறார். இந்த நிகழ்வு தற்செயலாக நடந்ததாகத்தான் அரசியல்வாதிகளாலும் சரி, மக்களாலும் சரி, இன்றுவரை பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல; தமிழ்நாட்டில் ராஜமன்னார் கமிட்டி பரிந்துரையின் பேரில் ‘மாநில சுயாட்சித் தீர்மானங்கள்' சட்டமன்றத்திலேயே நிறைவேற்றப்பட்டதுதான் காரணம். மாநில உரிமைகளை எழுப்பக் கூடாது; அப்படி எழுப்பும் கட்சியும் கூடாது; இரண்டையும் அறவே ஒழித்தாக வேண்டும் என்று அப்போதைய டெல்லித் தலைமை அந்தப் பொருளாளரை மிரட்டிப் பணியவைத்து, அந்தக் கட்சியையே உடைத்து செய்த காரியம்தான் அண்ணா பெயரிலான அந்தப் புதிய கட்சி.
மாநில உரிமைகள்
ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு மாநில உரிமைகள் அவசியம்; இல்லையென்றால் டெல்லியின் சர்வாதிகாரம்தான் கோலோச்சும். இதை அந்தப் பொருளாளரும் அவருக்குப் பின் வந்த அம்மாவும் கூட உணர்ந்துகொண்டனர்; முன்னவருக்கு ஒரு மக்களவைத் தேர்தல் தோல்வியும், பின்னவருக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் அவரே கூட தோற்றதும் உணர்த்தின. அது முதல் அவர்கள் மாநில உரிமைகளுக்காகக் குரல் எழுப்பவில்லை என்றாலும் ஏற்கனவே இருந்த உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருந்தனர்.
விட்டுக்கொடுக்கிறார்
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காதது மட்டுமல்ல; இருக்கிற உரிமைகளையும் ஒவ்வொன்றாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின்திட்டம், கூடங்குளம் அணுவுலைப் பூங்கா, தேனி நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், நீட், சிஏஏ இப்படியாக!
திரும்பப்பெறுக
இப்போது மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்தும் கூட, 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை அனைத்து மாநிலங்களுக்கும் முந்தி அதை அமல்படுத்தத் தொடங்கிவிட்டது அதிமுக அரசு. இதனை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, 5ஆம், 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு என்னும் அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெறுமாறு எச்சரிக்கிறது. இல்லையெனில் நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் எனவும் எச்சரிக்கிறோம்.