பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரத்தை ஆந்திரா அதிகரிப்பதை கண்டித்து த.வா.க. போராட்டம்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை ஆந்திரா அதிகரிப்பதைக் கண்டித்து பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம்- ஆந்திரா எல்லையான புல்லூரில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு தடுப்பணை ஒன்றை கட்டியுள்ளது. இத்தடுப்பணை மூலம் தமிழக விவசாயிகளின் 2,500 ஏக்கர் நிலம் பயனடைந்து வருகிறது.
தற்போது திடீரென புல்லூர் தடுப்பணையின் உயரத்தை 10 முதல் 15 அடியாக உயர்த்தும் நடவடிக்கையில் ஆந்திரா ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே புல்லூர் அருகே திம்மம்பேட்டையில் ஆந்திராவின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேல்முருகன், தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை ஆந்திரா அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் ஆந்திரா அரசு நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் இயங்க முடியாத அளவுக்கு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தார்.