ஈழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் ரயில் மறியல்... நாளை நடத்துகிறது வாழ்வுரிமைக் கட்சி
சென்னை: இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்துக என்பது உள்ளிட்ட தமிழக சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் நடத்த வேண்டும் என்கிற தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை இந்திய அரசு நிறைவேற்றக் கோரியும் ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செப்டம்பர் 21-ந் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
ரயில் நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள மத்திய அரசின் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.