காலைத் தொட்டு கேட்கிறேன்.. தற்கொலை முடிவை யாரும் எடுக்காதீர்கள்... வேல்முருகன் #vignesh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் உரிமையை மீட்க வலியுறுத்தியும் தீக்குளித்து மரணித்த விக்னேசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வீர வணக்கம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகாவில் தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டதைக் கண்டித்தும், காவிரி பாசன பகுதிகள் பாலைவனமாக மாறுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் தீ நாக்குகளுக்கு தம்மையே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி விக்னேசு தாரைவார்த்துக் கொடுத்த செய்தி பெருந்துயரத்தையும் வேதனயையும் தருகிறது.
தாய்மொழி காக்க, ஈழத் தமிழ் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த, பேரறிவாளன், முருகன், சாந்தன் உயிர் காக்க... தங்களது தேகங்களை தீக்கங்குகள் தின்ன கொடுத்து மடிந்த போராளிகள் வரிசையில் தம்பி விக்னேஷூம் இப்போது....
தம்பி விக்னேசுவின் கோரிக்கைகளும் கொள்கைகளும் உன்னதமானவை... அந்த கொள்கைகள் நிறைவேறும் வரை ஜனநாயக வழியிலான அறப்போராட்டங்களைத்தான் நாம் கையிலெடுக்க வேண்டும்.
ஆனால் இதுபோன்ற தம்மை தாமே அழித்துக் கொள்ளும் போராட்ட முறையை கிஞ்சித்தும் எமதருமை தமிழ் இளைஞர்களே சிந்துத்துவிடாதீர்கள்! உங்கள் இருபாதம் தொட்டு வேண்டுகிறேன்... உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் நாங்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான பலம்.... உங்களையெல்லாம் பறிகொடுத்துவிட்டா நாங்கள் போராடுவது?
மீண்டும் மீண்டும் எனதருமை தமிழ் இளைஞர்களே உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்... போதும் முத்துக்குமாரும், செங்கொடியும் விக்னேசும் போதும்... இனியும் உங்கள் உயிரை தீக்கு தாரைவார்த்துவிடாமல் திண்ணிய நெஞ்சுடன் தமிழர் தம் வாழ்வுரிமைக்கான போர்க்களத்தில் போராடுவோம் என அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.