தமிழக விவசாயிகள் போராட்டத்தை சட்டை செய்யாத பாஜகவை கண்டித்து சென்னையில் ரிசர்வ் வங்கி முற்றுகை
14 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை கண்டு கொள்ளாத பாஜக அரசைக் கண்டித்து சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சென்னை: விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 14ம் தேதியில் இருந்து இன்று வரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கூட கேட்க மத்தியில் ஆளும் பாஜக அரசு மறுத்து வருகிறது. ஆனாலும் சற்றும் சளைக்காத விவசாயிகள் தினந்தோறும் ஒரு போராட்ட வடிவத்தை மேற்கொண்டு உறுதியோடு போராடி வருகின்றனர்.
ரிசர்வ் பேங்க் முற்றுகை
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டு கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
ஏராளமான பெண்கள்
இந்தப் போராட்டத்தில் மகளிர் பாசறையைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
அழியும் விவசாயம்
அழியும் விவசாயத்தை காக்கவும், மடியும் விவசாயிகளை காக்க வேண்டியது அவசியம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார். மேலும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜகவை கண்டித்து பேசினார்.
முதல்வர் தலையிட..
14வது நாளாக எலிக்கறியைத் தின்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனாலும் தமிழக முதல்வர் இதுபற்றி இன்னும் வாயே திறக்காமல் இருக்கிறார். விரைவில், விவசாயிகளின் கோரிக்கை பற்றி மத்திய அரசிடம் டெல்லி சென்று முதல்வர் பேச வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்துள்ளனர்.