8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து - மத்திய அரசு முடிவிற்கு வேல்முருகன் கண்டனம்
சென்னை: இந்தியாவில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்.
அந்த அறிக்கையில், "இந்தியா முழுவதும் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை விரைவில் ரத்து செய்யப் போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம்சங்கர் கத்தாரியா கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கும் கல்விக் கொள்கையை மத்திய அரசு ஒருபோதும் கைவிடக் கூடாது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம்சங்கர் கத்தாரியா, 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கும் கொள்கையால் தொடக்கக் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதற்கு 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரையும் கட்டாயம் தேர்ச்சி பெற வைப்பது ஒன்றுதான் காரணம் என மத்திய அமைச்சர் கூறுவது ஏற்புடையது அல்ல.
கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்ப போதுமான ஆசிரியர்களை நியமிக்காதது; தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது; உரிய நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற காரணங்களால்தான் மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்படைகிறது. தற்போதைய 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கும் கொள்கையால் ஓரளவு கிராமப்புற மாணவர்கள் அடிப்படை கல்வி அறிவைப் பெற முடிகிறது.
ஆனால் இந்த கொள்கையை மத்திய அரசு ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி என்பது 8ஆம் வகுப்புடனேயே முடிவுக்கு வந்துவிடும் அபாயம் இருக்கிறது. தேர்ச்சி பெறாத மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். இது தனியார் பள்ளிகளுக்கு வெண்சாமரசம் வீசுகிற முயற்சியே அல்லாமல் வேறு எதுவும் இல்லை.
ஆகையால் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் கல்விக் கொள்கையை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும் கிராமப்புற அரசு பள்ளிகளில் தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் மாணவர்கள்- ஆசிரியர்கள் விகிதத்தை சரியாக பேணுவது; போதுமான நிதி ஒதுக்கீடு செய்து உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருவது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.