சுபாஷ் பண்ணையாருக்கு வைத்த குறி... 2 கூட்டாளிகள் கொலையால் தூத்துக்குடியில் பதட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுபாஷ் பண்ணையார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் இருவர் கொடூரமான கொல்லப்பட்டனர். பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் வைத்த குறியில் லேசான காயங்களுடன் சுபாஷ் பண்ணையார் தப்பிவிட்டார். இரட்டைகொலை சம்பம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள மூலக்கரையைச் சேர்ந்த பண்ணையார் குடும்பத்துக்கும், பசுபதி பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 25 ஆண்டுகளாக பெரும் பகை இருந்து வருகிறது.
வெங்கடேஷ பண்ணையாரின் தாத்தா அசுபதி என்பவர் முதலில் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து இருதரப்பிலும் சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். மோதல் உச்சகட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து பசுபதி பாண்டியன் திண்டுக்கல்லில் குடியேறினார்.
இந்நிலையில் வெங்கடேச பண்ணையார் கடந்த 2003 செப்டம்பர் 26ம் தேதி சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவராக சுபாஷ் பண்ணையார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பசுபதி பாண்டியன் கொலை
பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் கடந்த 2006 ஏப்ரல் 7ம் தேதி தூத்துக்குடி அருகே கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 2012 ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார்.
சுபாஷ் பண்ணையாருக்கு குறி
கடந்த 4 ஆண்டுகளாகவே சுபாஷ் பண்ணையாரை கொலை செய்ய, பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். நேற்றைய தினம் சுபாஷ் பண்ணையார் பழையகாயலில் தனது தென்னந்தோப்பில் தனது கூட்டாளிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு காரில் 20க்கும் மேற்பட்டோர் அங்கு சராமரியாக நாட்டு வெடி குண்டுகளை வீசினர். சத்தம் கேட்ட சுபாஷ் பண்ணையார் அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டார்.
வெட்டிக்கொலை
அந்த கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளால் சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்களை சுற்றி வளைத்து சராமரியாக வெட்டியது. இதில் சுரண்டை அருகே உள்ள இடையார்தவணையை சேர்ந்த ஆறுமுகசாமி, தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே உள்ள ரட்சனியபுரம் கண்ணன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆறுமுகச்சாமியின் தலையை மட்டும் அந்த கும்பல் அறுத்து எடுத்து சென்றது.
பசுபதி பாண்டியனுக்கு காணிக்கை
கொலை கும்பல் ஆறுமுகசாமியின் தலையை தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் தெய்வசெயல்புரம் விலக்கில் பசுபதிபாண்டியன் படத்துடன் உள்ள அவரது பாசறையின் போர்டுக்கு கீழே போட்டு விட்டு சென்றது.
தனியாக கிடந்த தலை
தலை மட்டும் தனியாக கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி கோபால், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இருவர் கொலை சம்பவத்தை அடு்த்து நெல்லை சரக டிஐஜி தினகரன், தூத்துக்குடி எஸ்பி அஸிவின் கோட்னிஸ் ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதனால் பழையகாய்ல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பசுபதிபாண்டியன் கொலையாளி
கொலையான ஆறுமுகசாமி சுபாஷ் பண்ணையாரின் தீவிர ஆதரவாளர். தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவை நிறுவனர் பசுபதி பாண்டியனை திண்டுக்கல் அருகே நந்தனபட்டியில் வைத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர். பின்னர் ஜாமீனில் வெளி வந்த அவர் சுபாஷ் பண்ணையாரின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
சிக்கியது எப்படி?
காரை தென்னந்தோப்பில் நிறுத்தியிருந்த அவர் அங்கு நடைபெற்று வந்த தேங்காய் பறிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வந்தார். அப்போதுதான் கொலை கும்பலிடம் மாட்டியுள்ளார். கொலையான மற்றொருவர் சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளராக இருந்துள்ளார். இவர் சலவை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தலையுடன் 30 கி்மீ சுற்றிய கொலையாளிகள்
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திலும் பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொலையாளிகள் ஆறுமுகசாமியின் தலையை மட்டும் வெட்டி எடுத்து சென்று கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள தெய்வசெயல்புரம் விலக்கில் தலையை போட்டு வி்ட்டு சென்றுள்ளனர்.
சோதனையில் தப்பியது எப்படி?
இடைப்பட்ட சோதனை சாவடிகளில் இருந்த போலீசார் இதை எப்படி கோட்டை விட்டனர் என்பது புரியாத புதிராக உள்ளது. போலீசார் செக்போஸடில் காரை நிறுத்தி சோதனையிட்டிருந்தால் ஆயுதங்கள் சிக்கியிருக்கும். கொலையும் தடுக்கப்பட்டிருக்கும். இதனால் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.
போலீஸ் குவிப்பு
பழையகாயலில் நடந்த இரட்டை கொலையை தொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பசுபதி பாண்டியன் சமாதி உள்ள அலங்காரதட்டு, பழையகாயல், சுபாஷ் பண் ணையாரின் சொந்த ஊரான மூலக்கரை, பசுபதி பாண்டியனின் சொந்த ஊரான அலங்காரத்தட்டு உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
தனிப்படைகள் அமைப்பு
இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் டிஎஸ்பி கோபால், தூத்துக்குடி ஏஎஸ்பி அருண்சக்திகுமார், மணியாச்சி டிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.