சென்னை ஐடிஐ மாணவர் கொலை சம்பவம்.. 2 பேர் கைது.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
டிஐ மாணவன் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னை கிண்டி ஐடிஐ மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 மாணவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து கொலைக்கான விசாரணையையும் அவர்களிடம் துவக்கியுள்ளனர்.
தாம்பரத்தை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சிவக்குமார். வயது 22. இவர் கிண்டியில் உள்ள ஐடிஐயில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிவக்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் மாணவர்கள் யாராவது வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று சிவக்குமாரை தேடும் முயற்சியில்கூட யாரும் ஈடுபடவில்லை. இது தொடர்பாக புகாரும் காவல்நிலையத்தில் அளிக்கவில்லை.
இந்த நிலையில் ஐடிஐ வளாகத்தின் உள்ளே மண்டிகிடந்த ஒரு புதருக்குள் உடலின் பல இடங்களில் கத்திகுத்து காயங்களுடன் கிடந்த ஒரு சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். பின்னர்தான் தெரிந்தது அது மாணவர் சிவக்குமார் என்று. இதையடுத்து சடலத்தை மீட்டிய போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? அவருக்கு யாராவது விரோதிகள் இருந்தார்களா? என்று சக மாணவர்களிடம் விசாரணை தொடங்கினர். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் ஏராளமான மதுபான பாட்டில்கள் கிடந்தன. அதனால் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா அல்லது ஐடிஐ மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பாரா என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
இந்நிலையில், சிவக்குமார் கொலை தொடர்பாக ஐடிஐ மாணவர்கள் மோகன், சதீஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்பின்னரே கொலைக்கான என்ன என முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.