ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது- 24 பேர் விடுவிப்பு
ராமநாதபுரம்: ஈராக் தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் அமைப்பின் படம், லோகோ இடம் பெற்ற டி சர்ட் போட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் திடீரென இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முதலில் அப்துல் ரஹ்மான் என்பவரை மட்டும் பிடித்து விசாரித்து வந்தது போலீஸ். இந்த நிலையில் இன்னொருவரையும் பிடித்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மானுடன் கைது செய்யப்பட்டுள்ள இன்னொரு நபரின் பெயர் ரில்வான். இவர்கள் மீது தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பது, குற்றச் சதிச் செயல், சர்ச்சைக்கிடமான டி சர்ட்களை விநியோகித்தது ஆகிய புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். எனவேதான் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக தொண்டியில் உள்ள மசூதி முன்பு கூடிய இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் இந்த சர்ச்சைக்கிடமான டி சர்ட்டை அணிந்து புகைப்படம் எடுத்தனர். அப்போதே அதற்கு மசூதி நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இது தேவையில்லாத வேலை என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இது ஜாலிக்காகத்தான் என்று இவர்கள் கூறியுள்ளனர். இந்தப் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
ஆனால் இந்த செயலுக்கு இஸ்லாமியர்கள்தான் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸாரும் விசாரணையில் குதித்தனர். முதலில் ரஹ்மானைப் பிடித்து விசாரித்தனர். அப்போது இவர்கள் யாருக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரிய வந்தது. இருப்பினும் தற்போது டி சர்ட்டுக்கு ஐடியா கொடுத்தவரான ரில்வான் மற்றும் ரஹ்மானை கைது செய்துள்ளது காவல்துறை.
திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.