மதுரையில் வெடித்தது 'டைமர்' பொருத்தப்பட்ட சக்தி குறைந்த வெடிகுண்டு - போலீஸ்
மதுரை: மதுரையில் நேற்று இரவு வெடித்த வெடிகுண்டு மிகவும் சக்தி குறைந்த, டைமர் பொருத்தப்பட்ட வெடிகுண்டு என்று போலீஸார் கூறியுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டும் இதேபோன்ற ஒரு குண்டுதான் சைக்கிள் ஒன்றில் வெடித்தது. அதே பாணியிலான குண்டுதான் இதுவும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகை வைகை ஆற்றங்கரை ஓரமாக அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம். அதுபோல நேற்று சேலம் மற்றும் ஓசூர் செல்ல வேண்டிய பஸ்களை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்தப் பேருந்துகளில் திடீர் என வெடிச் சத்தம் கேட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். போலீஸாரும் விரைந்து வந்தனர். கமிஷனர் சைலேஷ் குமார் யாதவும் விரைந்து வந்தார். விசாரணைக்குப் பின்னர் முழுவிவரம் தெரியும் என போலீஸ் கமிஷனர் கூறியிருந்தார்.
பீதியை ஏற்படுத்த திட்டமா?
இந்த நிலையில் வெடித்தது சக்தி குறைந்த வெடிகுண்டு என்று தெரிய வந்துள்ளது. மேலும் அதில் டைமரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுகள் பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தவே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டும் இதேபோல சைக்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடித்தது. அதே வகை குண்டுதான் தற்போதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று போலீஸார் கூறுகிறார்கள்.
9.5க்கு முதல் குண்டுவெடிப்பு
முதல் குண்டு 9.05 மணியளவில் சேலம் பஸ்ஸில் வெடித்தது. சீட்டுக்குக் கீழே வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த குண்டு மிக மிக குறைந்த சக்தி கொண்டது. எனவே சீட் மட்டுமே சேதம் அடைந்துள்ளது. அடுத்த குண்டு ஓசூர் பஸ்சில் வெடித்தது. இது சற்று கூடுதல் சக்தி வாய்ந்தது. எனவே பஸ்சின் தகர சீட்கள் பிய்த்துக் கொண்டு போயுள்ளன.
வயர்கள், டைமர் கண்டுபிடிப்பு
போலீஸார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் பிளாஸ்டிக் டப்பா, வயர்கள், வெடிகுண்டில் இருந்த பொருட்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முன்கூட்டியே வெடித்ததால் விபரீதம் தவிர்ப்பு
இந்த வெடிகுண்டுகளை 11.30 மற்றும் 12.30 ஆகிய நேரங்களில் வெடிக்குமாறு டைம் செட் செய்து வைத்திருந்தனர். ஆனால் முன்கூட்டியே அவை வெடித்து விட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. காரணம் முதல் பேருந்து 11.45 மணிக்கும், 2வது பேருந்து 12.30க்கும் கிளம்பவிருந்தது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின்போது இரு பேருந்துகளின் டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ் மீது தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.