விழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: கிராம மக்கள் சோகம்
விழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் கிரி 4ம் வகுப்பும், சீனுவாசன் மகன் பாலாஜி 2ம் வகுப்பும் சரவணம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நண்பர்களான இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை விட்டதால் அப்பகுதியில் உள்ள கால்வாய்க்குக் குளிக்கச் சென்றனர். இவர்கள் குளித்துக் கொண்டே விளையாடியவாறு இருக்க இவர்கள் இருவரும் கால்வாயின் வடிகால் பகுதியில் இருந்த சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர்.
குளிக்கச் சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கால்வாய் பகுதிக்கு சென்று பார்த்த போது இருவரின் ஆடைகள் மட்டுமே அங்கு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வடிகால் பகுதியில் இறங்கி தேடிய போது இருவரின் உடல்களும் சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலுக்கு குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கொத்தனூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.