சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு
Recommended Video
சென்னை: டிஜபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தேனி மாவட்ட காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றுள்ளனர். தேனி மாவட்ட காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய 2 பேரும் டிஜிபி அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தேனி மாவட்ட எஸ்பி மீது அவர்கள் இருவரும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினர். தேனி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்ததாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சரமாரி குற்றச்சாட்டு
தங்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் இடமாற்றம் செய்துள்ளனர் என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கவில்லை என்றும் அவர்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
தடுத்து நிறுத்தம்
அப்போது யாரும் எதிர்பாரத நிலையில் பையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டனர். இதனைக் கண்ட மற்ற காவல்துறை அதிகாரிகள் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
தண்ணீரை ஊற்றினர்
பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.
இதையடுத்து அந்த காவலர்கள் 2 பேரையும் சக போலீசார் மீட்டு டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர்.
அதிர்ச்சி சம்பவம்
காவலர்கள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்களும் சிதறி ஓடினர். சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை மீது குற்றச்சாட்டு
ஏற்கனவே பணிச்சுமை மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.