தென் தமிழக மக்களுக்கு ரமணன் ஆபிசில் இருந்து 'ஓலை'- மழை கன்பார்மாம்!!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தின் அநேக இடங்களில் வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது. போதிய அளவு மழை பெய்து உள்ளது. தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்திருந்தது. மேலும், கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.
இதுகுறித்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்றுமுன்தினம் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து, தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வர தொடங்கி இருக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யும். மேலும், வருகிற 14, 15 ஆம் தேதிகளில் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.