மதுரையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி: குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
மதுரை: மதுரை-தேனி சாலையில் உள்ள ஹெச்.எம்.எஸ். காலனியில் கழிவு நீர் தொட்டியை (பாதாள சாக்கடை சுத்தம் செய்கையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மதுரை மாநகராட்சியில் கழிவுநீரை அகற்றுவதற்கு 2 மோட்டார் பைபர்கள் உள்ளன. இவை பழுதடைந்துள்ளதால், கழிவுநீரை அகற்றும் பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களான மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த விசு ஆகியோர் மதுரை-தேனி சாலையில் உள்ள ஹெச்.எம்.எஸ். காலனியில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்கு தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கதிரவன் கூறுகையில்,
விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். நிவாரணத் தொகை நாளைக்குள் வழங்கப்படும். இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.