"ஒரே நாளில் இரண்டு தேர்வு எப்படி எழுதறது?”- குமுறும் பட்டதாரிகள்
சென்னை: தமிழகத்தில் செட் மற்றும் சி.டி.இ.டி ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுத உள்ள ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு தேர்வினையாவது மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான சி.டி.இ.டி தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.
2016 ஆம் ஆண்டுக்கான முதல் சி.டி.இ.டி. தேர்வு வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுத் தேதியை பல மாதங்களுக்கு முன்னரே சி.பி.எஸ்.இ அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமானது கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வான செட் அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்தத் தேர்வு இந்த ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த செட் தேர்வும் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான முதுநிலைப் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செட் தேர்வில் நூலக அறிவியல் உள்பட 5 க்கும் மேற்பட்ட பாடங்கள் விடுபட்டுள்ளதால் அந்தப் பாடங்களில் தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சோகத்தில் உள்ளனர்.
இந்த தேர்வுகளில் சி.டி.இ.டி தேர்வு தேதி முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதால் செட் தேர்வு நாளை வேறொரு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.