மதுரை: போலீஸ் போல நடித்து தொழிலதிபரின் 2 மகள்கள் கடத்தல் - 2 பேர் கைது
மதுரையில் தொழிலதிபரின் 2 மகள்களை கடத்திய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை: காரில் பள்ளிக்கு சென்ற மாணவிகளை போலீஸ் போல நடித்து கடத்திய நபர்களை மதுரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகைச் செல்வன். இவரின் மகள்களான அனுபஸ்ரீ, ஜெயஸ்ரீ ஆகிய இருவரும், நேற்று காலை காரில் பள்ளிக்குச் செல்லும் போது, ஓட்டுநரை தாக்கி மயக்க மருந்து கொடுத்துவிட்டு கடத்தப்பட்டனர்.
இது குறித்து அந்தச் சிறுமிகளின் தந்தை அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் 8 தனிப்படைகள் அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு தேடும் பணி நடைபெற்றது.
பேரம் பேசிய கடத்தல்காரர்கள்
இதனிடையே , குழந்தைகளைக் கடத்தியவர்கள் குழந்தைகளைத் விடுவிக்க 2 கோடி ரூபாய் தர வேண்டும் கேட்டனர். அவ்வளவு பணம் இல்லை என்று கார்த்திகை செல்வன் கூறவே இறுதியில் 50 லட்சத்திற்கு குழந்தைகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர்.
தப்பியோடிய கடத்தல்காரர்கள்
இதனையடுத்து கார்த்திகைச் செல்வனை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள் காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே வைக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு, சிறுமிகள் இருவரையும் அவர்களது வீட்டின் அருகே இரவு 11 மணி அளவில் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
நெல்லை நபர் கைது
இந்நிலையில் சிறுமிகளைக் கடத்திய சம்பவத்தில் ஜீவஜோதி, கண்ணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தல்காரர்கள் போலீஸைப் போல் நடித்து சிறுமிகளைக் கடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸ் விசாரணை தீவிரம்
ஜீவஜோதி என்பவர் கார்த்திகைச் செல்வன் குடும்பத்திற்கு தெரிந்த நபராவார். இந்த சம்பவத்தில் முக்கியப் புள்ளியாக இருந்து செயல்பட்டது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.