காணாமல் போன செயின்... நெல்லை தனியார் ஆலையில் இரு பிரிவாக மோதிக்கொண்ட தொழிலாளர்கள்
நெல்லை: நெல்லை அருகே காணாமல் போன தங்கச்சங்கிலி தொடர்பாக தொழிலாளர்கள் இருபிரிவாக மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி தனியார் நூற்பாலையில் பல்வேறு ஊர்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலுங்கடியை சேர்ந்த தொழிலாளி டேவிட் பொன்ராஜ் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி காணாமல் போனது.
காணாமல் போன அந்தத் தங்கச் சங்கிலியை அதே ஆலையில் பணியாற்றி வரும் முக்கூடலை அடுத்த பனையன்குறிச்சியை சேர்ந்த சுப்பையா என்பவர் கழுத்தில் அணிந்திருப்பதைப் பார்த்துள்ளார் பொன்ராஜ். இது தன்னுடையது என சுப்பையாவிடம் அவர் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் அவரவர் ஆதரவாளர்களை திரட்டி வந்து நூற்பாலை வாளகத்தில் மோதி கொண்டனர். இதில் பனையன்குறிச்சியை சேர்ந்த சுப்பையா, முத்துராஜ், மாரியப்பன், செல்வம், டேவிட் பொன்ராஜ், ஜோதிராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி சண்முகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கலுங்கடியை சேர்ந்த டேவிட் பொன்ராஜ், ஜோதிராஜ், வர்கீஸ், ஜெபதுரை, ராஜா, ஜெயகுமார், மகேஷ், தாஸ், ஏமர்சன், ஜோசப், பெஞ்சுமின் உள்பட 23 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இதேபோல் டேவிட் பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுப்பையா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயினுக்காக தொழிற்சாலை வளாகத்திலேயே தொழிலாளர்கள் இரு கோஷ்டியாக மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.