வெள்ளத்தில் வந்த விருந்தாளிகள்... தாம்பரத்தில் ஒரு வீட்டில் சிக்கிய 2 மலைப்பாம்புகள்!
சென்னை: சென்னை தாம்பரத்தில் மழை வெள்ளம் புகுந்த வீட்டில் இருந்து இரண்டு மலைப்பாம்புகள் பிடிப்பட்டுள்ளன.
கடந்த 1 மற்றும் 2ம் தேதி கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. படகுகள் மூலம் மக்கள் வீடுகளில் இருந்து மீட்கப் பட்டனர்.
ஒருபுறம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு, வீடுகளுக்குள் குடியேறின.
இந்நிலையில், தற்போது வெள்ள நீர் வடிந்து விட்ட நிலையில், வீடுகளுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். வெள்ள நீர் புகுந்ததால் சேறு அப்பிய வீடுகளை சுத்தப் படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளான மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் வீடொன்றைச் சுத்தம் செய்த போது, ஒரு அறையில் 2 மலைப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த மலைப்பாம்புகளை பிடித்து வீட்டில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். ஒரு பாம்பு 2 அடி நீளமும், மற்றொரு பாம்பு ஒரு அடி நீளமும் காணப்பட்டது.
பின்னர் அந்த இரண்டு பாம்புகளும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.
பிடிப்பட்ட இரண்டு பாம்புகளும் அரிய வகை இந்திய மலைப்பாம்பு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.