சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் பலி
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழக்கின்றனர். இன்று காலையில் ஏழாயிரம்பண்ணையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சில அறைகள் தரைமட்டமாகின.
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க கடுமையாக போராடினர். மேலும் வீரர்கள் உயிரை பணயம் வைத்து, அறையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு அறையில் எத்தனை பேர் வேலை பார்த்தார்கள்? இறந்தவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த டிசம்பர் மாதம் ஏழாயிரம்பண்ணை அருகில் கங்கர்கோட்டையில் நிகழ்ந்த வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு முதலிப்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் நூற்றுக்கணக்கோனோர் உயிரிழந்தனர். பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியாகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.