கோவில்பட்டி அருகே வேன் - லாரி மோதல்.. 2 பெண்கள் பரிதாப பலி
கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில், 2 குஜராத் மாநில பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள தளவாய்புரம் - ஆசூர் விலக்கில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ரயில் மூலம் மதுரை வந்து அங்குள்ள டிராவல்ஸ் வேன் மூலமாகக் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். இன்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தளவாய்புரம் - ஆசூர் விலக்கில் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வேன் நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போது மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற வெங்காய லோடு லாரி எதிர்பாராத விதமாக நின்று கொண்டு இருந்த வேன் மீது மோதியது. இதில் வேன் பலத்த சேதமடைந்தது மட்டுமின்றி வேனில் இருந்த சின்கான்பென், கான்ஷாபென் ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களைத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த 2 பெண்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.