இரட்டை இலை லஞ்ச வழக்கில் டிடிவி தினகரனை சிக்க வைத்த குரல் சோதனை - மீண்டும் திஹார்?
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினகரனை திகாரில் அடைக்க மீண்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
Recommended Video
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் டெல்லி போலீசார் சேர்த்துள்ளனர்.
இடைத்தரகர் சுகேஷ் உடன் டிடிவி தினகரன் பேசிய குரல் சோதனையில் இரண்டு குரல்களும் ஒத்துபோவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தினகரன் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கடும் குடைச்சலை கொடுத்து வரும் தினகரனுக்கு மீண்டும் செக் வைத்துள்ளனர் டெல்லி போலீசார்.
இடைத்தரகருக்கு ரூ.10 கோடி பேரம்
ஆர் நகர் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க, டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் தினகரன் தரப்பு ரூ.10 கோடி பேரம் பேசியதாகவும், ரூ.1.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
திகார் சிறையில் தினகரன்
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர். மேலும், டிடிவி தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின் சென்னை வந்து தினகரனிடம் விசாரணை நடத்தினர். கடந்த ஏப்ரல் 26ம் தேதி தினகரனை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
குற்றப்பத்திரிக்கையில் பெயர்
இந்நிலையில், திடீர் திருப்பமாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் தினகரன் பெயர் இல்லை எனவும் போதிய ஆதரம் இல்லை என்பதால், குற்றப்பத்திரிக்கையில் தினகரனின் பெயர் டெல்லி போலீசார் சேர்க்கவில்லை என்று தெரியவந்தது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் எனவும் செய்திகள் வெளியானது. அவர் செய்த பரிகாரங்கள் எல்லாம் கை கொடுக்கத் தொடங்கி விட்டதாக பேசிக்கொண்டனர்.
குற்றப்பத்திரிக்கையில் பெயர் வரும்
இந்த செய்தியை டெல்லி போலீஸ் இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன் மறுத்தார். இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இடைத்தரகர் சுகேஷ் மீது மட்டுமே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தினகரன் குற்றமற்றவர் என கூற முடியாது. தினகரன் உட்பட நான்கு பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அவர் விளக்கம் அளித்தார்.
தினகரனின் குரல்
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் தினகரன் டெலிபோனில் பேசிய ஆடியோ உரையாடல் தான் போலீசின் துருப்புச்சீட்டு. தினகரன் குரலை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் அனுமதி கேட்டனர். குரல் பரிசோதனைக்கு தினகரன் ஒத்துழைக்க மறுத்து விட்டார். ஜாமீனில் வெளிவந்த தினகரன் டிவிகளுக்கு பேட்டி கொடுத்தார். தனியார் தொலைக்காட்சி சேனல்களை அணுகி தினகரனின் பேட்டி அடங்கிய வீடியோவை பெற்று குரலை பரிசோதனை செய்து டெல்லி போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
செக் வைக்கும் டெல்லி போலீஸ்
ஜாமீனில் வெளிவந்த தினகரன் கடந்த சில மாதங்களாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சில எம்எல்ஏக்களை ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தினகரன் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் திகார் சிறைக்கு செல்ல நேரிடலாம் என்று கூறப்படுகிறது.