சென்னை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து எஸ்கேப்பான மேலும் 2 சிறுவர்கள் பிடிபட்டனர்
சென்னை: சென்னை கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய மேலும் 2 சிறுவர்கள் பிடிபட்டனர்.
சென்னை புரசைவாக்கம் கெல்லீஸ் பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்கு கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்படுகின்றனர்.
இங்கு கடந்த ஞாயிறன்று இருதரப்பு சிறார் குற்றவாளிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 33 சிறுவர்கள் இல்லத்தின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர்.
தப்பி ஓடிய 33 பேரில் இதுவரை 30 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் செங்கல்பட்டு கூர்நோக்கு சிறார் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் 3 சிறுவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையை அடுத்த மீஞ்சூரில் ஒரு சிறுவனையும் கேரளாவில் மற்றொரு சிறுவனையும் போலீசார் பிடித்துள்ளனர். எஞ்சிய ஒரு சிறுவனைத் தேடும் பணி தொடருகிறது.