முக்கொம்பில் ரூ.325 கோடியில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும்.. முதல்வர் அறிவிப்பு
முக்கொம்பில் 325 கோடி ரூபாய் செலவில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: முக்கொம்பில் 325 கோடி ரூபாய் செலவில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் நேற்று முன்தினம் இரவு 8 மதகுகளும் 4 தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று காலை மேலும் ஒரு மதகு உடைந்தது.
இதனால் திருச்சி - கரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அணையை சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
முதல்வர் ஆய்வு
இந்நிலையில் 9 மதகுகள் அடித்து செல்லப்பட்ட முக்கொம்பு மேலணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் முதல்வருடன் ஆய்வு மேற்கொண்டனர்.
ரூ.325 கோடியில் கதவணைகள்
இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 325 கோடி ரூபாய் செலவில் முக்கொம்பில் 2 புதிய கதவணைகள் கட்டப்படும் என அறிவித்தார். 100 மீட்டர் தள்ளி கதவணைகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அய்யன்வாய்க்காலில் கதவணை
புதிய கதவணை கட்டும்பணி விரைவில் தொடங்கும். கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும் ரூ. 85 கோடியில் கதவணை கட்டப்படும்.
15 மாதங்களில் முடியும்
திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி 4 நாட்களில் முடியும்.
புதிய கதவணைகள் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும்.
சம்பந்தமும் இல்லை
மதகுகள் அடித்து செல்லப்பட்டது விபத்து. மணல் குவாரிக்கும் மதகுகள் அடித்து செல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதிக நீர் வெளியேறியதால்
திருச்சி முக்கொம்பில் மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான அணையின் மதகு உடைந்தது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.