பைக்கில் சென்றபோது புளிய மரம் முறிந்து விழுந்து 2 பேர் பலி.. மணப்பாறை அருகே பரிதாபம்
புளிய மரம் பைக் மீது சாய்ந்து விழுந்ததில், 2 பேர் பலியானார்கள்.
திருச்சி: திருச்சி- மணப்பாறை அருகே மரம் சாய்ந்து விழுந்ததில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை, மற்றும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் வாழைமரங்கள் உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மரங்களை அகற்றும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. சூறைக்காற்று வீசி விளைநிலங்களும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகளும் பெரும் கவலையிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மெய்யம்பட்டியிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக சாலையில் இருந்த புளிய மரம் ஒன்று திடீரென முறிய தொடங்கியது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது புளிய மரம் முற்றிலும் சாய்ந்து விழுந்தது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜீ மற்றும் மனோகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.