வாடிப்பட்டி அருகே பயங்கர விபத்து: வேன் மீது அரசு பேருந்து மோதி 2 பேர் பலி - 8 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே வேன் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை: வாடிப்பட்டி அருகே வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே ரத்னபுரியை சேர்ந்தவர் சரவணன் 48. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வேனில் சென்றார்.
நேற்று அதிகாலை மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது 3 மணியளவில் மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து, வேனின் பின்புறம் எதிர்பாராதவிதத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் வேன் குப்புற கவிழ்ந்து விழுந்தது. அதில் சுப்ரமணியனின் 13 வயது மகன் தியானேஷ், சென்னை கே.கே.நகரை சேர்ந்த வெற்றிச்செல்வம் என்பவரது மகள் தானியா 8, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மதுரை, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.