தியேட்டரில் பிளாஸ்டிக் முட்டையில் பப்ஸ்.. உடல்நலம் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி
திருவள்ளூர் மணவாளநகர் திரையரங்கில் விற்ற பப்சில் பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர், மணவாளநகரில் உள்ள திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டையால் தயாரிக்கப்பட்ட பப்ஸ் சாப்பிட்ட இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சென்னை அயனாவரம் மாநகரப் பேருந்து பணிமனையில் உள்ள உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர்.
தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி புழக்கத்தில் வந்துவிடுமோ என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனை போக்கும் வகையில், தமிழகத்தில் நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் அரிசி கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையில் பிளாஸ்டிக் அரிசி ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள திரையரங்கில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மணவாளன் நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இடைவேளையின் போது சிலர் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதில் பிளஸ்டிக் முட்டை இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிளாஸ்டிக் முட்டை இருந்ததாக கூறப்படும் பப்சை சாப்பிட்ட இருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த பொதுமக்கள் தியேட்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.