உடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பலி.. ஒருவர் படுகாயம்
உடுமலை: இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடுமலையை அடுத்த குப்பம்பாளையத்தை சேர்ந்த மகேந்திர பூபதி மற்றும் விஷ்ணு செல்வம் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று காலை மாணவர்கள் இருவரும் சுந்தரராஜ் என்ற உறவினரின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றனர். அம்மாப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த உடுமலை ஒன்றிய வட்ட வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமாரின் அரசு ஜீப் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் மாணவர் மகேந்திர பூபதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் மாணவர் விஷ்ணுசெல்வம் மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் வழியிலேயே சுந்தரராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள குடிமங்களம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.