நெல்லை: மோட்டார் அறையிலிருந்து கசிந்த மின்சாரத்தால் ஆற்றில் குளித்த இருவர் பலி
நெல்லை: நெல்லை அருகே ஆற்றில் பாய்ந்த மின்சாரத்தால் குளிக்கச் சென்ற இருவர் பரிதாபமாகப் பலியானார்கள்.
ஓட்டுநர்களான ரமேஷ் மற்றும் காமாட்சி இருவரும் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பன்குளம் கருணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த குடிநீர் திட்ட உறைகிணறு மோட்டார் அறையிலிருந்து கசிந்த மின்சாரம் நீரில் பாய்ந்திருக்கிறது. இதனை அறியாமல் ஆற்றில் இறங்கிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
ஏற்கனவே, உறை கிணறு மோட்டார் அறையிலிருந்து மின் கசிவு இருப்பது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காததே இரு உயிர்களைப் பலி வாங்கக் காரணம் என இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
மேலும், அம்பை அரசு மருத்துவ மனை முன்பாக பலியானவர்களின் உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அம்பை டி.எஸ்.பி. மணிமாறன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் பொன்னுசாமி ஆகியோர் அளித்த வாக்குறுதிகளின் படி உறவினர்கள் சடலங்களைப் பெற்றனர்.
இருவர் பலியாகக் காரணமான அஜாக்கிரதை குற்றத்திற்காக குடிநீர்த் திட்ட பணியாளர்களான பால தண்டாயுதம், குமார் இருவரையும் கைது செய்ததோடு இசக்கி என்பவரையும் ஆழ்வார்குறிச்சி போலீசார்த் தேடி வருகின்றனர்.