தமிழகத்தில் இருந்து டூவீலரில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய மாணவர்கள் கைது!
செங்கோட்டை: தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் செல்ல முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் தமிழக போலீஸாரிடம் இருந்து தப்பி கேரள போலீஸாரிடம் பிடிபட்டனர்.
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களான பால்,அரிசி,காய்கறி,கோழி,உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தினமும் சென்று வந்த வண்ணம் உள்ளன.
இந்த வழியே செல்லும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதைக் கண்காணிக்கவும், வாகனங்களுக்கு வரி வசூலிக்கவும் புளியரையில் காவல்துறை,போக்குவரத்துத்துறை,வனத்துறை ஆகிய சோதனைசாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று இரவு புளியரை போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தபோது விலையுர்ந்த இரு சக்கர வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது. அதனை அங்கு பணியில் நின்ற போலீசார் பிரபாகரன்,ஜெயலானி,பால் ராஜ் ஆகியோர் நிறுத்திய போது அந்த இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றுள்ளது.
அதனை போலீசார் பிரபாகரன்,ஜெயலானிஆகியோர் இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளனர். அதற்குள் அவர்கள் கேரள மாநிலத்திற்குள் சென்றுவிட்டனர். அங்குள்ள மதுவிலக்கு வாகன சோதனை சாவடியில் பணியிலிருந்த போலீசார் அந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த கைகாட்டவே அவர்கள் தடுப்பு கம்பியில் இருசக்கர வாகனத்தை கொண்டு இடித்து விட்டு தப்ப முயற்சித்துள்ளனர்.
அதற்குள் அங்கு திரண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடத்தில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், அவர்களின் பெயர் இஸ்மாயில்,அபிநவ் நாயர் என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகத்திலிருந்து தப்பி கேரளாவில் சிக்கிய கஞ்சா கடத்தல் நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.