ஒரே நாளில் 2 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: சென்னை ஐஐடி
சென்னை : சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 2 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கல்வி நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேசனின் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் ஐஐடி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 2வது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இருவருக்கும் தகராறு முற்றியது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தற்கொலை சம்பவம் நிகழ்ந்த அதே குடியிருப்பு அருகே ஐஐடி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் அங்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டவர் புதுச்சேரியை சேர்ந்த பாண்டியன் மனைவி மகேஸ்வரி என்றும், ஐஐடியில் தத்துவம் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
இத்தற்கொலைகள் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் 2 பெண்கள் ஒரே நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீசார் விசாரணைக்கு ஐஐடி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது