தெற்கு சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மகன்களை மீட்க பெற்றோர் கோரிக்கை!
தெற்கு சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தங்களது மகன்களை மீட்டு தர அவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
நெல்லை: தெற்கு சூடானில் கடத்தப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த தமிழக பாஜக தலைவரின் உறவினர் மகன் உள்ளிட்ட இரண்டு பொறியாளர்களை மீட்டு தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த முத்து விஜயபூபதி மகன் மிதுன் கணேஷ் மற்றும் களியக்காவிளையை சேர்ந்த எட்வர்ட் அம்புரோஸ் ஆகிய இருவரும் பொறியாளர்களாக தெற்கு சூடானில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் இருதினங்களுக்கு முன்பு தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்ற போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட இருவரில் ஒருவர் தமிழக பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுர்ந்தரராஜனின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.