நள்ளிரவில் நிராகரிக்கப்படும் வரை தொடர்ந்து பரபரப்பை கிளப்பிய விஷால் வேட்பு மனு
முன்மொழிந்த இருவர் பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு பெரும் பரபரப்பையே கிளப்பிவிட்டது. ஒருவழியாக விஷால் தாக்கல் செய்த மனுவை நிராகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் அதிகாரி அறிவித்துவிட்டதால் இந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த 10 பேரில் தீபன், சுமதி என்ற இருவர் பின்வாங்கியதால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேட்புமனுவில் உள்ள தங்களது கையெழுத்து இல்லை என தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் மறுத்ததால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனிடையே அவர்கள் இருவரும் மிரட்டப்பட்டதால்தான் பின்வாங்கியுள்ளனர் என விஷால் குற்றம்சாட்டினார். அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். அதை விஷால் தரப்பு பின்னர் வெளியிடவும் செய்தது.
அத்தோடு நில்லாமல் ஆர்கே நகர் தேர்தல் அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார்.இந்த நிலையில் இரவில் மீண்டும் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
ஆனால் இரவு 11 மணியளவில் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இப்படி பரிசீலனையே நிறுத்தி வைப்பு, வேட்பு மனு நிராகரிப்பு, வேட்பு மனு ஏற்பு.. கடைசியாக தள்ளுபடி ஒரே பரபரப்பை கிளப்பிவிட்டது விஷால் வேட்புமனு.