நிர்மலா தேவி சிக்கியதால் பயம்.. காமராஜர் பல்கலைக்கழக 2 பேராசிரியர்கள் திடீர் தலைமறைவு!
நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருவதை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக போராசிரியர்கள் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
Recommended Video
விருதுநகர்: நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருவதை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக போராசிரியர்கள் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
5 நாட்கள் காவல்
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
தேவாங்கர் கல்லூரி
விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர் பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
ரகசிய விசாரணை
இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
பேராசிரியர்கள் தலைமறைவு
அதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.
கைது செய்ய தீவிரம்
நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.