தீபாவளிப் பரிசாக கொரியரில் வந்த ‘கொடிய விஷம்’... வேலூரில் 2 இளைஞர்கள் கவலைக்கிடம்
வேலூர் அருகே தீபாவளிப் பரிசாக கொரியரில் வந்த மதுவைக் குடித்த இரண்டு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வேலூர்: வேலூர் அருகே தீபாவளிப் பரிசாக கொரியரில் வந்த மதுவைக் குடித்த இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் சாத்துமதுரையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு கொரியரில் மர்மபார்சல் ஒன்று வந்துள்ளது. அதனை அவரது தாயார் வாங்கி வைத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சதீஷ், அந்த பார்சலைப் பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதன் உள்ளே விலை உயர்ந்த மது பாட்டில் ஒன்று இருந்துள்ளது. இதனால், யார் அனுப்பியது என்றே தெரியாத அந்த பார்சலை தானே வைத்துக் கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் தீபாவளி விருந்தாக தனது நண்பர் வசந்த்குமாரையும் போன் செய்து மது குடிக்க அவர் அழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து தீபாவளியன்று அந்த மதுவைக் குடித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் முதலில் கண் எரிச்சலும், பின்னர் வாந்தியும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து, கிறிஸ்டியன் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், நண்பர்கள் குடித்த மதுவில் கொடிய விஷம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில் நண்பர்கள் இருவரும் மர்ம பார்சலில் வந்த மதுவைக் குடித்தது தெரிய வந்தது. ஆனால், அந்தப் பார்சலில் இருந்த முகவரி போலி என்பதால், இந்த சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொரியரை அனுப்பியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.