பிரசாதம் சாப்பிட்ட 2 பாட்டிகள் பலியான விவகாரம்: மேட்டுப்பாளையத்தில் மருத்துவ குழு இன்று ஆய்வு
பிரசாதம் சாப்பிட்ட 2 மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக மருத்துவ குழுவினர் இன்று அப்பகுதியில் நேரில் ஆய்வு நடத்துகிறார்கள்.
மேட்டுப்பாளையம் நாடார் காலனியில் உள்ள செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் செவ்வாயன்று நடந்த திருவிழாவின்போது, பக்தர்களுக்கு அவல் பொறி பிரசாதம் வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட 50-க்கும் அதிகமானோர், வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
விஷமாக மாறியது
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், கோவில் பிரசாதம் தயாரிக்க அசல் நெய்யை பயன்படுத்தாமல் தீபம் ஏற்ற பயன்படுத்தும் நெய்யை பயன்படுத்தியதால் அது விஷமாக மாறி பலருக்கு வாந்தி, வயிற்று போக்கை ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
உடற்கூறு ஆய்வு
இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்டு சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இருந்த லோகநாயகி, சாவித்திரி ஆகிய மூதாட்டிகள் இன்று உயிரிழந்தனர். அவர்களது உடல் உடறுகூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி ஆய்வு
இதற்கிடையே மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் வருவாய் துறையினர் வீடு, வீடாக சென்று பிரசாதம் சாப்பிட்டவர்கள் யாராவது சிகிச்சை பெறாமல் இருக்கிறார்களா? என கேட்டறிந்து வருகிறார்கள். மேலும் குடிநீர் சம்பந்தமாக எதுவும் பாதிப்பு ஏற்பட்டதா, குடிநீர் குழாயில் உடைப்பு ஏதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பன குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
குடிநீர் நிறுத்தம்
குடிநீர் குளோரைடு அளவு சரியாக உள்ளதா? என ஆய்வு நடத்த குடிநீரை பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வரும் வரை குடிநீர் வினியோகத்தை நிறுத்தி உள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு மாத்திரைகள், திரவ கரைசல்கள் வழங்கப்பட்டன. இவை தவிர, கோவையில் இருந்து மருத்துவ குழுவினர் பொதுமக்கள் யாரேனும் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து மேட்டுப்பாளையம் சென்று ஆய்வு நடத்தஉள்ளனர்.
காலாவதியான நெய்யை கொண்டு பிரசாதம் தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.