டுபாக்கூர் ரூ2,000 நோட்டுகள்: திருப்பூர் அருகே பொதுமக்களிடம் வசமாக சிக்கிய கேடி பில்லா- கேடி ரங்கா!
திருப்பூர் அருகே கலர் ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஆடு வாங்க முயன்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் விவசாயிடம் பணத்திற்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து ஆடுகள் வாங்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் விவசாயம் செய்து வருவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் இரண்டு இளைஞர்கள் காரில் வந்தனர்.
அவர்கள் வேலுச்சாமியிடம், முதலில் 10 ஆடுகள் தங்களுக்கு விலைக்கு வேண்டும் என கேட்ட அவர்கள் பின்னர் 6 ஆடுகள் போதும் அனால், அவை உடனடியாக வேண்டும் என்று சொல்லி உள்ளனர். அதன் படி ஒரு ஆட்டுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 6 ஆட்டிற்கு ரூ. 30 ஆயிரம் தர வேண்டும் என வேலுச்சாமி விலை பேசி உள்ளார்.
விலை குறித்து நடந்த பேரத்தின் இறுதியில் முடிவாக 6 ஆடுகளுக்கும் சேர்த்து ரூபாய் 28 ஆயிரம் தருவதாக அந்த இளைஞர்கள் கூறி உள்ளனர். அதன்படி விவசாயி வேலுச்சாமியிடம் 28 ஆயிரத்திற்கு ரூபாய் இரண்டு ஆயிரம் நோட்டுக்களை கொடுத்தனர்.
அதனை வாங்கிய வேலுச்சாமி தனது வீட்டுக்கு அருகே உள்ள உறவினர் ஒருவரிடம் கொடுத்து அதனை எண்ணும்படி கூறி உள்ளார். அவர் நோட்டுகளை எண்ணியபோது, அந்த இளைஞர்கள் கொடுத்த14 நோட்டுக்களும் ஒரே வரிசை எண் கொண்டதாக இருந்தது தெரிய வந்தது. இதனால் அவை கள்ள நோட்டுகளாக இருக்குமோ என்கிற சந்தேகம் அந்த உறவினருக்கு எழுந்துள்ளது.
இதனையடுத்து சுதாரித்த வேலுச்சாமி ஓடிச்சென்று கார் சாவியை பிடுங்கி கொண்டு சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அந்த இளைஞர்கள் இரண்டு பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த வீராசாமி மகன் கார்த்திக் மற்றும் நாகராஜ் மகன் சங்கர் என்பது தெரிய வந்தது. இவர்கள் இரண்டு பேரும் சரவணம்பட்டியில் மட்டன் கறிக்கடை நடத்தி வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டன் கறி விற்பதற்காக விவசாயியை ஏமாற்றி ஆடு வாங்க வந்திருப்பதும் தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான கலர் ஜெராக்ஸ் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏழை விவசாயிகளிடம் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றும் சம்பவம் தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.