சென்னை: ஹெல்மெட் சோதனையின் போது விபத்து... 2 இளைஞர்கள் காயம் - சாலைமறியல்
syn: சென்னையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த இரண்டு மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
சென்னை: சென்னையில் கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி போலீசிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இரண்டு மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மோஹித், வயது19. பவன் குப்தா, 18 இருவரும் யானைகவுணி பகுதியைச் சேர்ந்தவர்கள். கல்லூரி மாணவர்கள். பெசன்ட் நகரிலிருந்து யானைக்கவுணி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மயிலாப்பூரில் களங்கரை விளக்கம் அருகே நகைப் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக வாகன சோதனை நடைபெறுகிறழ. இந்த சோதனையில் செயின் பறிப்பு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களும் திடீர் சோதனையின் மூலம் பிடிபட்டுள்ளனர். இதனால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை கலங்கரை விளக்கம் அருகில் இன்று காலையில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்களை நிறுத்தி லைசென்சு, ஆர்.சி புத்தகம் நகல் போன்றவற்றை கேட்டனர். அப்போது சாந்தோம் பகுதியில் இருந்து கடற்கரை நோக்கி காமராஜர் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வேகமாக வந்தனர்.
அவர்களை போக்குவரத்து போலீஸ் ஏட்டு சாம்வில்லியம்ஸ் தாஸ் மறித்தார். இதில் சாம் வில்லியம்ஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. ஏட்டு மீது மோதிய மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏட்டுவின் கால் முறிந்தது அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
காயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரர் சாமுவேல்,33. இவருக்கு வலது காலில் அடிபட்டுள்ளது. ராயப்பேட்டையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காலில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இருவரும் தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்கள். இருவரும் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மோகித், புவன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவன் மோகித்துக்கு தலை, கை, காலில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. புவனுக்கு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இப்போது இருவருமே நலமாக இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் இருவரையும் இன்னும் அவரது உறவினர்கள் நேரில் சென்று பார்க்கவில்லை.
மோகித் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக அவரது சகோதரர் கூறினார்.இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியில் ஈடுபட்டனர். வாகனசோதனை என்ற பெயரில் விரட்டியதால் தான் விபத்து ஏற்பட்டு வாலிபர்கள் காயம் அடைந்தார்கள் என்று அவர்களுக்கு ஆதரவாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சமாதானம் செய்ததையடுத்து கலைந்து சென்றனர். சம்பவம் குறித்து மெரினா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போக்குவரத்து போலீஸ் வழிமறித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும் திடீரென ப்ளாஷ் நியூஸ் ஓடவே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் யாரும் மரணமடையவில்லை , காயம் மட்டுமே ஏற்பட்டது என்று தகவல் வெளியானது. இந்த விபத்து கருத்து கூறியுள்ள சென்னை போக்குவரத்து இணை ஆணையர் கே.பவானீஸ்வரி, "கலங்கரை விளக்கம் பகுதியில் காலையில் நடந்த சம்பவத்தில் இளைஞர்களை போக்குவரத்து போலீசார் துரத்தவில்லை.
ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பது நீதிமன்ற உத்தரவு அதை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதி செய்வதே எங்கள் பணி. வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த இரண்டு இளைஞர்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கிறார்கள். இதில் போக்குவரத்து போலீஸ் ஒருவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞர்கள் இருவரும் மைலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் உடல்நலம் சீராக இருக்கிறது என்றார் இணை ஆணையர் பவானீஸ்வரி.