தேவர் ஜெயந்தி: ஆளில்லா உளவு விமானம் மூலம் போலீஸ் கண்காணிப்பு
ராமநாதபுரம்: கமுதியில் மூன்று நாட்கள் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவினை போலீசார் ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
ராமாநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா அக்டோபர் 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது. தேவர் ஜெயந்திக்கு தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மரியாதை செலுத்த வருவதுண்டு. கடந்தாண்டு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் இந்தாண்டு போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் ஜெயந்திக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
விதிகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் ஜெயந்தியில் குழப்பம் ஏற்படுத்த முயலம் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் அண்ணா பல்கலைகழ மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா உளவு விமானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இதன் செயல்முறை விளக்கம் நேற்று திருப்பாச்சேத்தியில் டிஎஸ்பி(பொறுப்பு) மங்களேஸ்வரன் முன்னிலையில் நடந்தது. மதுரை&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பது குறித்த விளக்கம் நடந்தது. திருப்பாச்சேத்தியை சுற்றியுள்ள புதுக்குளம், ஆவரங்காடு, வேளாங்குளம், மாரநாடு உள்ளிட்ட கிராமங்களை நேற்று படமெடுத்து கண்காணிப்பில் கேமரா ஈடுபட்டது.
இந்த விமானம் மூலம் 5கி.மீ சுற்றளவில் படங்களை துல்லியமாக பதிவு செய்ய முடியும். 300மீட்டர் உயரத்தில் பறந்தபடி தரையில் உள்ள சின்னஞ்சிறிய பொருளையும் துல்லியமாக இந்த கேமரா மூலம் படமெடுக்க முடியும். நேற்று நடந்த செயல்முறை விளக்கத்தில் இன்ஸ்பெக்டர் சந்தரமாணிக்கம், எஸ்ஐ செல்லகண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயல்முறை விளக்கத்தை அண்ணா பல்கலைகழக நிபுணர் டாக்டர் செந்தில்குமார், முகமது ரசீத் தலைமையில் மாணவர்கள் செய்து காட்டினர்.
வடமொழியில் தட்ஷா என்று கூறப்படும் இந்த விமானம் தமிழில் காற்றுராஜா என்று அழைக்கப்படுகிறது. அக்டோபர் 30ம் தேதி இதே போல மூன்று விமானங்கள் கமுதி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
விமானத்தில் உயர் தொழில்நுட்பம் கொண்ட ஹெச்டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்ட்ரோல் ரூமில் தயார் நிலையில் அதிரடிப்படை வீரர்கள் இருப்பார்கள், சட்டவிரோத செயல்கள் நடப்பது தெரிந்த உடன் சம்ப்ந்தப்பட்ட இடத்திற்கு செல்லம் வகையில் தயார் நிலையில் இவர்கள் இருப்பார்கள்
டிஎஸ்பி(பொறுப்பு) மங்களேஸ்வரன் கூறுகையில் இந்த விமானம் 5கி.மீ சுற்றளவில் நடப்பதை பதிவு செய்வது, திருப்பாச்சேத்தியில் மூன்று நாட்கள் இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபடும், 300மீட்டர் உயரத்தில் பறக்கும் இந்த விமானம் சிறு அசைவை கூட காட்டி கொடுத்துவிடும், இதன் மூலம் சட்டம் ஓழுங்கை சீராக கண்காணிக்க முடியும் என்றார்.