சர்ச்சைகளால் இழுபடும் உடன்குடி மின் திட்டம்- டெண்டர் திறப்புக்கு உயர்நீதிமன்றம் தடை!
சென்னை: பல்வேறு சர்ச்சைகளால் இழுபட்டுக் கொண்டிருக்கும் உடன்குடி மின் திட்டத்துக்கான புதிய டெண்டரை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டன. ஆனால் 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இத்திட்டத்துக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின்னர் 2013 டெண்டர் விடப்பட்டதில் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், "பெல்" நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் இந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சீனா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதிமுக அரசைப் பொறுத்தவரையில் இந்த டெண்டரை பெல் நிறுவனத்திடம் ஒப்படைத்தாக வேண்டும் என்று முனைப்பு காட்டுவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. இது யாருடைய ஆதாயத்துக்காக செய்யப்படுகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் அரசு அமைக்க வேண்டிய மின் திட்டத்தை இப்படியே இழுத்துக் கொண்டே தனியாரிடம் மின்சாரத்தை அதிக விலைக்குக் கொள்முதல் செய்கிறது அதிமுக அரசு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில்தான் இந்த உடன்குடி மின் திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இத்திட்டத்துக்கான புதிய டெண்டரை திறப்பதற்கு இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.