வரும்... ஆனா வராது... 'உடன்குடி' மின்நிலையம் அமைப்பதில் "உள்ளே வெளியே" ஆட்டம் காட்டும் தமிழக அரசு!!
சென்னை: தமிழகம் மின்வெட்டில் தத்தளிக்கும் நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்துக்கு புதிய டெண்டர் வெளியிடுவதற்கு தமிழக அரசு அனுமதி தராமல் இழுத்தடித்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 யூனிட்டுகள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்க பல ஆண்டுகளுக்கே முன்னரே அதாவது 2007ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது.
இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய மின் வாரியம் சார்பில் 2 ஆண்டுகளுக்கு முன்னரே டெண்டரும் கோரப்பட்டது. இதனடிப்படையில் 4 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன.
டெண்டர் திடீர் ரத்து
இறுதியாக சீனா நிறுவனம் மற்றும் மத்திய அரசின் பெல் நிறுவனம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் திடீரென டெண்டரில் டெக்னிக்கல் பிரச்சனை என கூறி கடந்த மாதம் 13-ந் தேதி மின் வாரிய இயக்குனர் குழுவால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
இடியாப்ப சிக்கல்..
இப்படி டெண்டரை திடீரென ரத்து செய்தது ஏன்? என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலறிக்கை கொடுத்தார்.. ஆனாலும் அந்த பதிலில் ஏகப்பட்ட உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் தொடர்கின்றன.
புதிய டெண்டர்..
இதனிடையேதான் உடன்குடி மின் நிலைய கட்டுமான பணிக்கு புதிய டெண்டர் வெளியிடலாம் என மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு கோப்புகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
இழுத்தடிக்கும் அரசு
ஆனால் தமிழக அரசோ ஏதோ ஒரு காரணத்தால் அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், உடன்குடிக்கு மறு டெண்டர் வெளியிட எரிசக்தி துறை செயலர் ராஜேஷ் லக்கானி வழியாக தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டது.
மேலும் மின்வாரியம் அமைப்பதில் மும்முரம் காட்டாமல் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறது தமிழக அரசு என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
வரும்.. ஆனால் வராது..
ஆனால் இதுவரை அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசு அனுமதி கொடுத்து ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்து பணி ஆணை வழங்க இன்னும் ஓராண்டாகிவிடும்.. இதனால் உடன்குடி கட்டுமான பணிகளை நடப்பாண்டில் துவங்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
இதனால் உடன்குடி மின் திட்டம் கனவுத் திட்டமாகிவிடும்.. தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனைக்கே தீர்வே வராது என்றும் சுட்டிக்காட்ப்படுகிறது...