தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. உதயக்குமார்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உதயக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாகத அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ஒன்றிய அரசு ஓராணை பிறப்பிக்கும்; ஒருவர்கூட அருகே வர முடியாது. பிரதமர் மோடி பெயரில் பெரிதாகக் கொண்டாடுங்கள் என்றெல்லாம் கூவித் திரிந்தார்கள் சிலர். தற்போது உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறதாம். நல்ல வேடிக்கை.
வண்ணப் பொடிகள் மக்களுக்கும் சூழலுக்கும் பாதகமானவை; எனவே ஹோலி கொண்டாடக்கூடாது, பட்டாசுகளும் காற்றை மாசுபடுத்தி, சுவாச நோய்களை உருவாக்குகின்றன. எனவே தீபாவளி கொண்டாடக்கூடாது என்று இந்த உச்ச நீதிமன்றம் சொல்லுமா?
மிருகங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவேண்டியத் தேவையில்லை. நமது பண்பாடு, கலாச்சார வி்ஷயங்களை நாம்தான் தேர்வு செய்ய வேண்டுமே, முடியுமே தவிர ஒன்றிய அரசோ அல்லது ஒன்றுக்கும் உதவாத வீணர்களோ அல்ல.
இயற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு என்று சிந்திக்கத் துவங்கியிருக்கும் நமக்கு மாடுகளும், சாணமும் முக்கியமானவை. மாடுகளைக் கொண்டாடும் கலாச்சார நிகழ்வுகளும் இன்றியமையாதவை. மாடுகளை இம்சிக்காத நிலையைத் தொடர்ந்து பேணி, அவைகளைப் போற்றி வளர்க்கும் பண்பைத் தக்கவைத்து, ஜல்லிக்கட்டை நாம் கொண்டாடுவோம். யார் வந்து தடுக்கிறார்கள் என்று பார்ப்போம். உரிமைகள் யாரும் யாருக்கும் தருவனவல்ல. உரிமைப்பட்டோர் தாமாகவே எடுத்துக் கொள்பவை.
சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.