பேரறிவாளன், முருகன், சாந்தனைப் பார்க்க 'கூடங்குளம்' உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரைப் பார்க்கச் சென்ற அணு உலை எதிர்ப்பு குழுஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டுப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை சந்திக்க நேற்று, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் வேலூர் மத்திய சிறைக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு சிறைத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய உதயகுமார், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாங்கள் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்து பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இடிந்தகரையில் போராட்டம் தொடங்கி ஆயிரம் நாட்களாகிறது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், இடிந்தகரையில் எங்களது போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். நாங்களும் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பானவர்கள். அதனால் நாங்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்திக்க வந்தோம்.
இங்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாங்கள் மீண்டும் சந்திக்க முயற்சி செய்வோம்.
சமீபகாலமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து வருகிறது. அதனை அங்கு உள்ள அதிகாரிகள் மறைத்து விடுகின்றனர்.
கூடங்குளம் அணு உலையில் குளறுபடிகள் பெருகி விட்டன. மேல் அதிகாரிகள், போலீசார் ஒன்று சேர்ந்து கூட்டாக எங்கள் இயக்கத்தை அழிக்க முயற்சித்து வருகின்றனர்.
ஆனால் எங்கள் இயக்கத்தை அழிக்க முடியாது, நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நாங்கள் போட்டியிட்டதில் 60 ஆயிரம் வாக்குகள் வாங்கி உள்ளோம்.
இதுவே எங்களுக்கு வெற்றி தான். எங்கள் இயக்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் ‘‘இந்தியா முழுவதும் உள்ள அணு உலை குறித்து பொதுவான இடத்தில் விவாதம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்'' என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.